பிரான்சில் தமிழர்களின் நடமாட்டம் குறைந்தது..! விசா அற்றவர்களை தேடி அதிரடி.

பிரான்சில் சட்டவிரோத குடியேறிகளைத் தேடிப்பிடிக்கும் 48 மணிநேர சிறப்பு நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில் வதிவிட உரிமை அற்ற தமிழ்மக்கள் தமது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
தொடருந்துகள், தொடருந்து நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் தற்போது அதிரடியான சோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்த நடவடிக்கையில் 4,000 க்கும் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்ர் புருனோ ரீடெய்ல்யூ தெரிவித்துள்ளார்.
தமிழ் வணிக நிலையங்கள் அதிகம் உள்ளதும் தமிழர்கள் அதிகம் நடமாடும் பகுதியுமான லா சப்பல் பகுதிக்கு அண்மையில் உள்ள பிரான்சின் வடபிராந்தியத்துக்கு தொடருந்துகள் அதிகம் செல்லும் கார்த் நோட் தொடருந்து நிலையப்பகுதியிலும் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

கடந்த மாதம் சட்டவிரோத குடியேறிகளை பிடிக்கும் வகையில் நடத்தபட்ட இரண்டு நாட்களுக்குரிய நடவடிக்கையில் 750 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து நேற்றும் இந்த 48 மணிநேர நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் தொடருந்துகள் மற்றும் பேருந்துகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் செங்கன் வலைய நாடுகளில் எல்லைக்கட்டுப்பாடற்ற பயண சலுகை நடைமுறையில் உள்ளதால் சட்டவிரோத குடியேறிகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஊடாக பிரான்சுக்கு வந்து அங்கு தங்கியிருந்து ஆங்கிலக்கால்வாயை கடந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு பயணிக்க முனைவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரான்சில் முன்னரை விட கடும் எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளதாக நேற்று அறிவித்த உள்துறைஅமைச்சர், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை 47,000 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *